தமிழக முதல்வராகத் தொடர்ச்சியாக இரண்டாம் முறையும் முதல்வர் பதவிக்கு ஆறாவது முறையும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்
ஜெயலலிதா. சுமார் 40.8 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறார். நடந்து முடிந்த தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்குக் கோடிக்கணக்கான பணம் பிரதான கட்சிகளால் செலவு செய்யப்பட்டிருக்கிறது
என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் அதுமட்டுமே தேர்தல் முடிவுகளுக்கு முழு காரணமாக இருக்க முடியாது.
அப்படியானால் கடந்த ஐந்தாண்டுகளில் செல்வி ஜெயலலிதாவின் ஆட்சியில் நடந்தேறிய அத்தனை ஊழல்களையும், முறைகேடுகளையும் தமிழக மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டு விட்டார்களா? அல்லது ஒட்டுமொத்த தமிழகத்திலும் மது ஆறாகப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும், தமிழக பெண் வாக்காளர்கள் மற்ற கட்சிகளைவிட நான்கு லட்சம் வாக்குகளை அ.தி.மு.க.விற்கு அதிகமாக அளித்திருக்கின்றனரே அதனால் பெண்களும் இம்மாநிலத்தின் மதுக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்களா? என்றால் அதிலும் உண்மையில்லை.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக மக்களுக்கு ஒரு கட்சியின் கொள்கை சார்ந்த அரசியலைக் கற்றுத்தருவதற்குப் பதிலாக ஆட்சி அதிகாரத்தை மட்டுமே மையப்படுத்தும் ஓட்டு அரசியலையே அனைத்துக் கட்சிகளும் கற்றுத் தந்திருக்கின்றன. எனவேதான் பூத் சிலிப்புடன் பணத்தையும் எதிர்பார்க்கிறார்கள்
மக்கள். எதிர்வரும் காலத்தில் நேர்மையான தேர்தலை நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணைய சட்டத்தில் காலத்திற்கேற்ப சில திருத்தங்களைச் செய்வதன் மூலம் ஊழல் இல்லாத தேர்தலை உருமாற்றுவதுடன் மக்களின் மனநிலையையும் மாற்றி அவர்களை நேர்மையான வாக்காளர்களாகத் தேர்தலில் பங்கெடுக்கச் செய்ய முடியும்.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு தொடர்ச்சியாக இரண்டாம் முறை தமிழக முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜெயலலிதா இன்றும் அ.தி.மு.க ஒரு தனிப்பெரும் கட்சியாக இருப்பதற்கு எம்.ஜி.ஆரும் இரட்டைஇலை சின்னமும் முக்கிய காரணம் என்பதை மறந்து விடக்கூடாது. இதுவரை தன்னுடைய தவ வாழ்க்கைக்கு பெருமை சேர்க்கும் எந்தவொரு திட்டத்தையும் ஜெயலலிதா தமிழக மக்களுக்குச் செய்து தரவில்லை.
ஜெயலலிதா அவர்களே! தமிழகத்தின் விளிம்புநிலை மக்களின் அன்றாட தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யக்கூடிய தற்காலிகத் திட்டங்களை தவிர்த்து அவர்களது தலைமுறைக்கும் பயன்தரக்கூடிய திட்டங்களை நிறைவேற்றுவீர்களேயானால் தமிழக அரசியல் வரலாற்றில் உங்களுக்கு தனி இடம் உண்டு. அதற்கு அடித்தளமாக தேவை ஒரு சுயபரிசோதனை. செய்வீர்களா....!
No comments:
Post a Comment